மணிப்பூரில் மெய்தி சமூகத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிர்ப்பு

இம்பால்,

வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சுமார் 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் 6 பேர் இன்று (சனிக்கிழமை) அங்கு செல்கின்றனர்.

மணிப்பூர் ஐகோர்ட்டின் 20-ம் ஆண்டு விழாவையொட்டி அங்கு செல்லும் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் ஆகியோர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சமடைந்துள்ள நிவாரண முகாம்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த 6 நீதிபதிகளில் கோடீஸ்வர் சிங் மெய்தி சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். எனவே அவரை குகி மக்கள் அதிகம் வாழும் சுராசந்த்பூர் மாவட்டத்துக்குள் அனுமதிக்க மாட்டேம் எனக்கூறி மாவட்ட வக்கீல்கள் சங்கம் அறிவித்தது.

இந்த நிலையில் மெய்தி சமூகத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு அனுமதி மறுக்கும் உத்தரவை திரும்பப் பெறக்கோரி சுராசந்த்பூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தை, அனைத்து மணிப்பூர் வக்கீல்கள் சங்கம் (அம்பா) வலியுறுத்தி உள்ளது. மணிப்பூரின் அனைத்து பகுதிகளிலும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுதந்திரமாக ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என அம்பா வலியுறுத்தி உள்ளது. அதே சமயம் “மெய்தி சமூகத்துக்கு எதிராக, குறிப்பாக நீதிபதிக்கு எதிராக எந்த தவறான எண்ணமும் இல்லை. பதற்றமான சூழல் நிலவுவதால் நீதிபதியின் பாதுகாப்பு கருதியே இந்த முடிவை எடுத்துள்ளோம்” என சுராசந்த்பூர் மாவட்ட வக்கீல்கள் சங்கம் விளக்கமளித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.