இந்தியாவில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 588 தொல் பொருட்களில், 297 பொருட்கள் அமெரிக்காவில் இருந்து கடந்தாண்டு இந்தியா வந்துள்ளன என மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத் கூறியுள்ளார்.
அவர் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: பழங்கால பொருட்களின் சட்டவிரோத விற்பனையை தடுக்க இந்தியா – அமெரிக்கா இடையே கலாச்சார சொத்துக்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. நாட்டை விட்டு இதுவரை 588 தொல்பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளன. இவற்றில் 297 பொருட்கள் கடந்தாண்டு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பியது. இதேபோல் யுனெஸ்கோ, இன்டர்போல் ஆகிய சர்வதேச அமைப்புகளுடன் தேவைக்கேற்ப இந்தியா இணைந்து செயல்படுகிறது. இவ்வாறு அமைச்சர் கஜேந்திர செகாவத் கூறினார்.