காமெடி நடிகராக நமக்கு பரிச்சயமான முத்துக்காளை குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்து அடுத்தடுத்து பட்டப்படிப்புகளை முடித்து பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ஏற்கெனவே இரண்டு பட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வியில் முடித்திருந்த அவர் கடந்த 2023-ம் ஆண்டு பி.லிட்,. பட்டம் பெற்றிருந்தார்.

இதனை தாண்டி நடிப்பின் பக்கமும் கவனம் செலுத்தி வருகிறார் முத்துக்காளை. லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி இந்தியாவுக்கு பெருமையை தேடி தந்திருக்கும் இளையராஜாவை நடிகர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் சந்தித்து வருகிறார்கள். அந்த வரிசையில் முத்துக்காளையும் இளையராஜாவை சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு இளையாராஜா குறித்து நெகிழ்ந்து சில விஷயங்களை கூறியிருக்கிறார் முத்துக்காளை.
அவர், ̀̀`எங்கள் ஊருக்கு அருகே உள்ள சத்திரப்பட்டி யில் சிறு வயதில் நான் ஒரு மளிகை கடையில் வேலை செய்யும் போது எதிரே ஒரு ஹோட்டல் கடை. அங்கு அன்னக்கிளி பட பாடல் ரெக்கார்டர் போடும் போது, நான் மளிகை கடையில் எந்த வேலை இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு அந்த ஸ்பீகருக்கு முன்னால் போய் நின்று விடுவேன். அப்படி நின்றதனால் கடை ஓனரிடம் பல முறை அடி வாங்கி இருக்கிறேன். அப்படி ஒரு ரசிகன் இல்லை, வெறியன்.

நான் சினிமாவிற்கு வந்த பிறகு பலமுறை அவரை நேரில் பார்த்து இருந்தாலும் 1990-ம் ஆண்டு பிரசாத் ஸ்டுடியோவில் இயக்குநர் கேயார் அவர்கள் இயக்கும் ̀ஈரமான ரோஜாவே’ பட பூஜை ரெக்கார்டிங் பார்த்து பிரமித்து போனேன். இப்படி பல அனுபவங்கள். நேற்று சிம்பொனி நாயகரை சந்தித்து வாழ்த்து கூறி, ஆசி பெற்ற தருணம். அவருடைய இசையில் நான் பல படங்கள் நடித்து இருந்தாலும் அவரோடு போட்டோ எடுப்பது இதுவே முதல் முறை. மகிழ்ச்சி!” என நெகிழ்ந்துக் கூறியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
