சீருடைக்கு அளவெடுப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை: தையல்கடைக்காரர் கைது

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடகம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சுதீர் (வயது 44). இவர் அப்பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறார். சுதீர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் தைத்து கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி தனக்கு சீருடை தைக்க அளவு கொடுப்பதற்காக சுதீருடைய கடைக்கு சென்றுள்ளார். அப்போது உனது ஆடைக்கு அளவு எடுக்க வேண்டும் எனக்கூறி கடையில் உள்ள ஒரு தனி அறைக்கு மாணவியை சுதீர் அழைத்துச் சென்றார்.

அப்போது அளவெடுப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பதறிய அந்த மாணவி கத்தியபடி வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு வந்து தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் உடனே திருவனந்தபுரம் பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுதீரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.