பெங்களுருவில் கனமழை: நகரின் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது

பெங்களூரு: கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் சனிக்கிழமை (மார்ச் 22) அன்று காற்றுடன் கூடிய கனமழை பொழிவு பதிவானது. இந்த மழை கடும் வெப்பத்திலிருந்து பெங்களூரு நகரவாசிகளை சற்றே தணிக்க செய்தது. இருப்பினும், காற்றுடன் கூடிய மழையால் மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழுந்த சம்பவங்களும் நகரில் ஆங்காங்கே நடந்துள்ளது. மேலும், சில பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இந்த நிலையில் பெங்களூருவின் புலகேசி நகரில் மரம் விழுந்ததில் 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்தார். கனமழையால் பெங்களூரு நகரில் மட்டும் சுமார் 30 மரங்கள் மற்றும் 48 மரக்கிளைகள் விழுந்துள்ளன. இதையடுத்து அதை அப்புறப்படுத்தும் பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் அரசு துறை ஊழியர்கள் பணியாற்றி வருவதாக தகவல்.

இன்றும் மழை: கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னடா, பிதார், குல்பர்கா, யாத்கிர், ராய்ச்சூர், கொப்பல், பெங்களூரு, கோலார், சிக்கபள்ளாபுரா, துமகுரு, ராமநகரா, சிக்மங்களூர், குடகு, ஹாசன், சித்ரதுர்கா, சாமராஜ நகர், மாண்டியா, மைசூரு ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை இன்று (மார்ச் 23) பெய்யக்கூடும் என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பெல்லாரி, விஜயநகரா பகுதிகளில் சில இடங்களில் மழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அன்று மோசமான வானிலை காரணமாக பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய சுமார் 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.