கோவை மாவட்டம், திருமலையம்பாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் முதுகலை சீனியர் மாணவர் ஒருவரை, இளங்கலை மாணவர்கள் கூட்டாக சேர்ந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில் விடுதி அறையில் சீனியர் மாணவரை முட்டி போட வைத்து.. “இனிமேல் இப்படி பண்ண மாட்டேனு சொல்லு.” என்று அடித்து மிரட்டுகிறார்கள். அந்த மாணவர், “வலிக்கிறது” என்று கைக்கூப்பி அழும்போதும் ஜூனியர் மாணவர்கள் விடாமல், “முட்டி போடு.. இல்லைனா போலீஸ்கிட்ட சொல்லிடுவோம்.” என்று மிரட்டி தாக்குகிறார்கள். முதல்கட்ட தகவல்படி சீனியர் மாணவர், ஜூனியர் மாணவர்களின் அறையில் பணம் எடுத்ததாக சந்தேகப்பட்டுத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்தக் கல்வி நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “எம்.ஏ படிக்கும் மாணவர் பணத்தைத் திருடிவிட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஜூனியர் மாணவர்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் எங்களிடம் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட 13 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையிலும் தகவல் கொடுத்துள்ளோம். நாளை (24.3.25) அந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரை அழைத்து விசாரணை செய்ய உள்ளோம்.” என்று கூறியுள்ளனர்.