IPL 2025, CSK vs MI: ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய சிஎஸ்கே அணி 155 ரன்களில் மும்பையை கட்டுப்படுத்தியது.
CSK vs MI: நூர் அகமது கலக்கல்
மும்பை அணியின் பேட்டிங்கில் அதிகபட்சமாக திலக் வர்மா 31, சூர்யகுமார் யாதவ் 29, தீபக் சஹார் 28 ரன்களை அடித்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் நூர் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதே நேரத்தில், கலீல் அகமது 3 விக்கெட்டுகள், அஸ்வின் மற்றும் நாதன் எல்லிஸ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
CSK vs MI: ருதுராஜ் அதிரடி
இதையடுத்து, 156 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சிஎஸ்கேவுக்கு ஆரம்பமே அதிர்ச்சிதான். எதிர்பாராத விதமாக ஓப்பனிங்கில் ராகுல் திரிபாதி களமிறங்கினார். அவரும் 2 ரன்களிலேயே ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியை தொடங்கினார். ரச்சின் பொறுமை காட்டினார். இதனால், வேறு விக்கெட் இழப்பின்றி பவர்பிளேவில் 62 ரன்களை சிஎஸ்கே எடுத்தது. ருதுராஜ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதன்பின் அவர் 53 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை அடித்திருந்தார்.
CSK vs MI: ஆட்டம் காட்டிய விக்னேஷ் புத்தூர்
ஆனால் அவர் ஆட்டமிழந்த பின்னர் சிஎஸ்கேவின் நிலை சற்று மாறத்தொடங்கியது. காரணம், பவர்பிளேவுக்கு பின் வந்த விக்னேஷ் புத்தூர் தான் ஆட்டத்தையே மாற்றினார் எனலாம். அவர் வீசிய 8வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட், 10 ஓவரில் சிவம் தூபே, 12 ஓவரில் தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றினார். இவர்கள் மூவருமே அவரது மெதுவான பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட நினைத்து ஆட்டமிழந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
CSK vs MI: மும்பை செய்த பெரிய தவறு
மிடில் ஆர்டரில் சிஎஸ்கே செய்தது போலவே சுழற்பந்துவீச்சு தாக்குதல் மூலம் மும்பை தாக்குதல் தொடுத்தது. சாம் குர்ரான் விக்கெட்டை வில் ஜாக்ஸ் கைப்பற்றியதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரச்சின் ரவீந்திரா உடன் விளையாடிய ஜடேஜா பொறுமையுடன் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்.
ஆனால், 17வது ஓவரில் டிரென்ட் போல்ட் வீச வந்ததே ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. நீண்ட நேரம் பவுண்டரி வராமல் இருந்தது. ஆனால், அந்த ஓவரில் ஒரு பவுண்டரியை அடிக்க மொத்தம் 10 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன் பின் 18வது ஓவரை வீசினார் விக்னேஷ் புத்தூர். அந்த ஓவரில் ரச்சின் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அழுத்தத்தை குறைத்தார்.
CSK vs MI: ஜடேஜா ரன் அவுட்
2 ஓவர்களுக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை நமன் திர் வீசினார். அந்த ஓவரில் தொடர்ந்து 3 பந்துகள் டாட் பாலாக மாற, 4வது பந்தில் ஜடேஜா அவசரப்பட்டு ஓடி வந்தார். இதனால், அவர் ரன் அவுட்டாகி வெளியேறினார். அவர் 18 பந்துகளில் 17 ரன்களை அடித்திருந்தார்.
CSK vs MI: தோனியின் கெத்தான என்ட்ரி
“நீ பொட்டு வச்ச தங்கக் குடம்… ஊருக்கு நீ மகுடம்” என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரக் கூச்சலுடன் தோனி கெத்தாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்த ஓவரின் கடைசி 2 பந்திலும் தோனி ரன் அடிக்காதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. ஆனால், சான்ட்னர் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு ரச்சின் ரவீந்திரா ஆட்டத்தை முடித்துவைத்தார்.
Calm, composed, effective
Rachin Ravindra takes #CSK closer to victory with a well-crafted half-century
Updates https://t.co/QlMj4G7kV0#TATAIPL | #CSKvMI | @ChennaiIPL pic.twitter.com/TqQDkEOGHs
— IndianPremierLeague (@IPL) March 23, 2025
CSK vs MI: நூர் அகமது ஆட்ட நாயகன்
இதன்மூலம், சிஎஸ்கே 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரச்சின் ரவீந்திரா 45 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 65 ரன்களை அடித்தார். மும்பை பந்துவீச்சில் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளையும், வில் ஜாக்ஸ் மற்றும் தீப் சஹார் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை சிஎஸ்கே வீரர் நூர் அகமது வென்றார்.