சவுக்கு சங்கர் தாயார் அளித்த புகார் மீது சிபிசிஐடி விசாரணை!

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 24) காலை சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவத்தை அடுத்து அவரது தயார் கமலா, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் அது தொடர்பாக புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உள்ளதாக தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.

அதன் விவரம்: சென்னை – கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வசித்து வரும் ஆச்சிமுத்துவின் மனைவியான கமலா (68) என்பவர் இன்று காலை தன் வீட்டில் சுமார் 20 பேர் கொண்ட ஒரு கும்பல் நுழைந்து, தன்னை அவதூறாக பேசியதோடு, கழிவு நீரை வீசி வீட்டை மாசுபடுத்தி, தனக்கு மிரட்டல் விடுத்ததாக கூறி கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் மனுவாக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், புகார்தாரர் கமலாவின் மகனும், யூடியூபருமான சங்கர் என்கிற சவுக்கு சங்கர். தனது பேட்டியில் சென்னை பெருநகர காவல் துறையினரையும், காவல் ஆணையரையும் குறித்து சில குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் தனது வேண்டுதலில் மேற்படி மனு மீதான விசாரணையை மற்றொரு விசாரணை அமைப்புக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், மேற்கண்ட காவல் நிலைய மனு மேல் விசாரணைக்காக சிபிசிஐடி (குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு) மாற்றம் செய்யப்பட்டுள்ளது’ என தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த அத்துமீறல் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, திருமாவளவன், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.