சென்னை: “நம் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறோம்.” என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று (திங்கள்கிழமை) பேசியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடர்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் தான் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வட மாநிலங்களில் எந்த விகித்தத்தில் தொகுதிகள் மறுவரையறைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு குறித்து தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது.
இதற்கு துணை நின்ற தமிழ்நாட்டின் கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கும் தமிழ்நாடு மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இருக்கும் தொகுதி வரையறை, 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும். அரசியலமைப்பில் அதற்கான சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
கடந்த வாரம் சனிக்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரிலும், ஓடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொளி காட்சி வாயிலாகவும் கலந்துகொண்டு, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
விரிவான ஆலோசனைக்குப் பிறகு நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படையுடன் நடைபெற வேண்டும், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது, உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், கூட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவர்களின் மாநில பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று, நம் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து நாடாளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.