கடல் கன்னி போன்ற மர்ம உயிரினம்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த இங்கிலாந்து தம்பதி

லண்டன்,

இங்கிலாந்தில் உள்ள பீச் ஒன்றில் பவுலா மற்றும் தவே ரீகன் தம்பதி பொழுது போக்கி கொண்டிருந்தது. அப்போது, அவர்கள் கண்ட காட்சி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கென்ட் பகுதியில் மார்கேட் என்ற இடத்தில் ஒன்றாக பீச்சில் அவர்கள் சுற்றி திரிந்தபோது, கடல் கன்னி போன்ற உருவம் கொண்ட அந்த மர்ம உயிரினம், பாதி மணலில் புதைந்த நிலையில் இருந்தது.

வேற்று கிரகவாசியின் உடல் மற்றும் தலையுடன், மீன் வாலுடன் அது காணப்பட்டது. இதுபற்றி பவுலா ரீகன் வெளியிட்ட பதிவில், என்னுடைய வாழ்க்கையில் இது போன்ற ஒன்றை நான் பார்த்ததே இல்லை. அது என்னவென்றே என்னால் கூற முடியவில்லை. அது ஒரு விசித்திர உயிரினம்.

அது சீல் என்ற உயிரினத்தின் இறந்த உடலாக இருக்க கூடும் என முதலில் நினைத்தேன். தலை மனிதனை போன்று இருந்தது. ஆனால், பின்பகுதி மீனின் வாலுடன் காணப்பட்டது. அது மென்மையாகவும் பஞ்சு போன்றும் இருந்தது. எனினும், அது அழுகியது போன்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. ஆனால், நிச்சயம் அது வித்தியாசம் நிறைந்த ஒன்று என தெரிந்தது என தெரிவித்து உள்ளார்.

ரீகன் தொடர்ந்து கூறும்போது, அந்த மர்ம உயிரினம் என்னவென்று சுற்றியிருந்த யாராலும் கூற முடியவில்லை. இந்த உயிரினத்தின் புகைப்படங்களை நாங்கள் எடுக்காவிட்டால், எங்களை ஒருவரும் நம்பியிருக்கமாட்டார்கள் என்றும் கூறுகிறார். அந்த மர்ம உயிரினத்தின் புகைப்படங்களை மற்றொரு எக்ஸ் பயனாளரான மெலிசா ஹால்மேன் என்பவர் பகிர்ந்து உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.