சென்னை: நடிகர் மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: “நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
தனது தந்தையின் இயக்கத்தில் ‘தாஜ்மகால்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, ‘சமுத்திரம்’, ‘அல்லி அர்ஜுனா’, ‘வருஷமெல்லாம் வசந்தம்’ எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ். இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் அவர் முயன்று பார்த்தவர்.
இளம் வயதில் அவர் எதிர்பாராத விதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு வயது 48.
இயக்குநர் பாராதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அவரது மகன் மனோஜ். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ஈரநிலம் கடல் பூக்கள் உள்ளிட்ட பாரதிராஜாவின் திரைப்படங்களிலும், அல்லி அர்ஜுனா, மகா நடிகன், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
அண்மையில், மனோஜ் தனது தந்தையின் வழியில் இயக்குநராகி, மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று மாலை அவரது வீட்டில் இருந்தபோது மனோஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மனோஜ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.