டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 முதல் மார்ச் 8 வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதுதொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடமும் வாக்குமூலம் பெற்றனர். அதன் தொடர்ச்சியாக டாஸ்மாக் நிறுவன மதுபான கொள்முதல், பார் உரிமம், போக்குவரத்து போன்றவற்றுக்கான டெண்டர் உள்ளிட்டவை மூலமாக ரூ. ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறை நடத்திய இந்த சோதனை அரசியலமைப்பு சட்ட கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரானது என்றும், தமிழக அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த சோதனை சட்டவிரோதமானது என்றும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்தக்கூடாது என்றும் அறிவிக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை கடந்த மார்ச் 20 அன்று விசாரி்த்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 25-க்கு தள்ளிவைத்திருந்தனர். அதுவரை அமலாக்கத் துறை எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் இடைக்கால தடை விதித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணையில் இருந்து இருவரும் விலகுவதாக அறிவித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.