தெலங்கானா மாநில அமைச்சராகிறார் விஜயசாந்தி?- ஏப்ரல் 3-ல் அமைச்சரவை விரிவாக்கம்

தெலங்கானாக மாநில அமைச்சராக நடிகையும், காங்கிரஸ் கட்சி மேலவை உறுப்பினருமான விஜயசாந்தி பொறுப்பேற்பார் என எதிர்பார்க்ப்படுகிறது.

தெலங்கானா மாநிலத்தில் சமீபத்தில் எம்எல்சி (மேலவை) தேர்தல் நடந்து முடிந்த நிலையில், வரும் ஏப்ரல் 3-ம் தேதி அமைச்சரவை விஸ்தரிப்பு நடைபெற உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் பல மூத்த கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமென அக்கட்சியின் மேலிடத்தை வலியுறுத்தி வருகின்றனர். முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் தற்போது துணை முதல்வர் பட்டி விக்ரமார்க்கா, 10 அமைச்சர்கள் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், முன்னாள் எம்பியும், நடிகையுமான விஜயசாந்தி, திடீரென மேலவை உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் மனு தாக்கல் செய்தார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை. கட்சி மேலிடத்தில் இருந்து நேரடியாக விஜயசாந்திக்கு எம்எல்சி பதவி வழங்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டதால், அவர் மனு தாக்கல் செய்தார். இதை முதல்வர் ரேவந்த் ரெட்டி கூட எதிர்பார்க்க வில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, விஜயசாந்தி போட்டியின்றி மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் வரும் ஏப்ரல் 3-ம் தேதி தெலங்கானா மாநில அமைச்சரவை விஸ்தரிப்பு நடைபெற உள்ளது. இதில் விஜயசாந்திக்கு இடம் தரப்படும் எனவும் பேச்சு பலமாக அடிபடுகிறது. இதனால் விஜயசாந்தி முதன்முறையாக தெலங்கானா மாநில அமைச்சராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.

மேலும், புதிய அமைச்சர் பதவிக்கான போட்டியில் மைனம்பல்லி அனுமந்த ராவ், விவேக், ஆதி ஸ்ரீநிவாஸ், பிரேம்சாகர், கடையம் ஸ்ரீஹரி உள்ளிட்டோரும் இருப்பதாக கூறப்படுகிறது. விஜயசாந்திக்கு வாய்ப்பு வழங்கவிருப்பதால், ஏற்கனவே அமைச்சராக உள்ள கொண்டா சுரேகாவின் அமைச்சர் பதவி பறிபோகும் எனவும் கூறப்படுகிறது. கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே சிவக்குமாரின் பலத்த சிபாரிசால் விஜயசாந்திக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் நடைபெற உள்ள தேர்தலில் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் காங்கிரஸ் தரப்பில் விஜயசாந்தி பிரச்சாரம் செய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.