ஐபிஎல் பார்ப்பவர்களுக்கு சஞ்சீவ் கோயங்கா யார் என்று நிச்சயம் ஓரளவுக்காவது தெரிந்திருக்கும். 2016, 2017-ல் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் சஞ்சீவ் கோயங்கா.
இவர், 2017-ல் தோனியை விட ஸ்டீவ் ஸ்மித் சிறந்த கேப்டன் என்று தோனியை கேப்டன்சியிலிருந்து நீக்கி ஸ்மித்தை கேப்டனாக நியமித்தது அப்போது பேசுபொருளாக மாறியிருந்தது.
அதைத்தொடர்ந்து, 2022-ல் ஐபிஎல்லில் புதிதாகச் சேர்க்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிலும் இவர் ஒன் ஆஃப் தி உரிமையாளராக இருந்தார். அந்த அணிக்கு கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டார்.

இதில், கடந்த ஆண்டு ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, மைதானத்தில் கே.எல்.ராகுலிடம் சஞ்சீவ் கோயங்கா சற்று ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ விவாதப்பொருளானது.
பின்னர், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மெகா ஏலத்தில் லக்னோ அணியிலிருந்து கே.எல். ராகுல் விடுவிக்கப்பட்டு, ரூ. 14 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். மறுபக்கம், ரிஷப் பன்ட்டை லக்னோ அணி ஏலத்தில் ரூ. 27 கோடிக்கு எடுத்து கேப்டனாக நியமித்தது.
மிஸ்ஸான வெற்றி
இவ்வாறிருக்க, இந்த சீசனில் இரு அணிகளும் மார்ச் 24-ம் தேதி மோதிய தங்களின் முதல் ஆட்டத்தில், லக்னோ அணி தன்னுடைய சில தவறுகளால் கைமேல் இருந்த வெற்றியை டெல்லியிடம் தாரைவார்த்தது.
இதனால், சஞ்சீவ் கோயங்கா இப்போது யாரை என்ன சொல்லப் போகிறாரோ என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் முணுமுணுத்தனர். இந்த நிலையில், டெல்லியுடனான தோல்விக்குப் பிறகு தனது வீரர்களை சஞ்சீவ் கோயங்கா உற்சாகப்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
“‘ ℎ , ” pic.twitter.com/AXE8XqiQCo
— Lucknow Super Giants (@LucknowIPL) March 25, 2025
எக்ஸ் தளத்தில் லக்னோ அணி நிர்வாகம் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், “இந்தப் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலிருந்து நான் எடுத்துக்கொள்வதற்கு நிறைய நேர்மறையான விஷயங்கள் இருக்கின்றன. பவர்பிளேயில் நம்முடைய பேட்டிங் மற்றும் பந்துவீச்சு நன்றாக இருந்தது.
நாம் ஒரு இளம் அணி. இத்தகைய நிகழ்வுகள் நடக்கும்தான். நாளை முதல் நேர்மறையான விஷயங்களை எடுத்துக்கொண்டு முன்னேறுங்கள். நிச்சயம் நல்ல முடிவுகளை நாம் பெறுவோம்.
இந்தப் போட்டியின் முடிவு ஏமாற்றம்தான். இருப்பினும், இதுவொரு சிறந்த போட்டி. எனவே, நன்றாக விளையாடுங்கள்” என்று தனது வீரர்களிடம் சஞ்சீவ் கோயங்கா கூறினார்.