2021 சட்டமன்றத் தேர்தலில் ‘பா.ஜ.க’வுடன் கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க, பல சிக்கல்களால் பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று சமீபமாக கூறிவந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.
அதற்கேற்ப நேற்று (மார்ச் 25) எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்றிருந்தனர்.

டெல்லியில் இருக்கும் அ.தி.மு.க அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர்கள், அதன் பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்துக்கே நேரில் சென்று சந்திருந்தனர். இது ‘பா.ஜ.க – அ.தி.மு.க’ கூட்டணி பேச்சுகள் அரசியலில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.
இதுகுறித்து இன்று (மார்ச் 27) தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, “‘அ.தி.மு.க’வில் ஓ.பன்னீர் செல்வத்தை இணைக்க வாய்ப்பில்லை. பிரிஞ்சது, பிரிஞ்சதுதான். இனி அவரை சேர்ப்பதற்கு வாய்ப்பேயில்லை. இந்தக் கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.
அவர் என்றைக்கு நாங்கள் கோவிலாக மதிக்கக்கூடிய ‘அ.தி.மு.க’ தலைமை கட்சி அலுவலகத்தில் ரவுடிகளைக் கூட்டிச் சென்று கூட்டம் நடத்தி, அதன் மீது தாக்குதல் நடத்தினாரோ அன்றைக்கு அவருக்கு ‘அ.தி.மு.க’வில் இருப்பதற்குத் தகுதியில்லாமல் போனது. அந்த அடிப்படையில் அவரை இனி இணைக்க வாய்ப்பேயில்லை.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலமிருக்கு, அதுக்குள்ள எப்படி கூட்டணி பற்றி பேசுவது. மக்கள் கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். கூட்டணி பற்றி நாங்கள் ஏதும் பேசவில்லை.
மற்றக் கட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்” என்று பேசியிருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
