‘காக்க காக்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. சென்ற வருடம் இதே நாளில் அவர் காலமானார். அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தும் போது, “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி” என்று பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

பாலாஜி டு டேனியல் பாலாஜி
டேனியல் பாலாஜியின் நிஜப்பெயர் பாலாஜி. ‘சித்தி’ என்ற தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் ஸ்கோர் செய்திருந்ததால் டேனியல் பாலாஜியாக மாறினார். `காக்க காக்க’, `வேட்டையாடு விளையாடு’, `பொல்லாதவன்’, `பைரவா’, `வடசென்னை’, `பிகில்’ உள்ளிட்ட பல படங்களில் தனது முத்திரையை பதித்தவர். அவரது மறைவு குறித்து இயக்குநர்கள் எஸ்.எஸ்.ஸ்டான்லி மற்றும் சி.வி.குமார் ஆகியோர் கனத்த இதயத்துடன் பகிர்ந்தவை இங்கே.

‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் இயக்குநரும், ‘மகாராஜா’ உள்பட பல படங்களில் நடித்தவருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி நினைவுகள் பகிர்கிறார்.
”என்னோட படத்துல தான் அவர் அறிமுகமானதாக பலரும் நினைப்பார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. ‘காக்க காக்க’ படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு பார்த்து தான் அவரை கமிட் செய்தேன். அவர் முரளியின் உறவினர் என்பதெல்லாம் பின்னர் தான் தெரியவந்தது. அவர் தமிழில் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ஒரு ஹீரோவாக உருவாகியிருக்க வேண்டியவர். அதற்கான அத்தனை தகுதிகளும் அவரிடம் உண்டு.
ஆனால், ஏனோ சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். சின்ன கதாபாத்திரங்கள் எதுவும் நடித்திராமல் கொஞ்சம் பிடிவாதமாக இருந்திருந்தால் ஹீரோவா வாய்ப்பே அவருக்கு கிடைத்திருக்கும் என்பது எனது நம்பிக்கை.” என்கிறார் எஸ்.எஸ்.ஸ்டேன்லி.

சி.வி.குமாரின் இயக்கத்தில் ‘மாயவன்’, ‘கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார் டேனியல்.
”அவர் மிக நெருங்கிய நண்பர். நல்ல மனிதர். திரையில் தான் ரொம்ப கொடூரமானவராக இருந்தார். ஆனால், பழகுவதற்கு இனிமையானவர். திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டிற்கு நானும் செல்வேன். என்னோட வீட்டிற்கு அவரும் வருவார். நேரம் கிடைக்கையில் பேசிக்கொள்வோம். நான் இயக்கிய இரண்டு படங்களில் அவர் நடித்திருக்கிறார். உதவி இயக்குநர்களின் மீது பேரன்பு உள்ளவர். அருமையான மனிதர். அவரது இழப்பு தனிப்பட்ட முறையிலும் இழப்பு தான். எனது தயாரிப்பில் ஒரு படம் அவர் இயக்கவும் விரும்பினார். அதற்கான வேலைகளும் ஒரு பக்கம் நடந்தது. அவர் மறைவை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.” என்கிறார் சி.வி.குமார்.