நிலத்தை எடுத்துக்கொண்டதற்கு 50 ஆண்டுகளாக உரிய இழப்பீட்டை வழங்காததால் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவர்கள் கலெக்டரின் காரை கயிறு கட்டி இழுத்துச் செல்ல முயன்ற சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்காக மதுரை தத்தனேரியைச் சேர்ந்த கருப்பையா-மீனாட்சியம்மாள் தம்பதிக்குச் சொந்தமான எல்லீஸ் நகரிலுள்ள 2 ஏக்கர் 14 சென்ட் நிலம் 19 ஆயிரத்து 688 ரூபாய்க்கு மாவட்ட நிர்வாகம் மூலம் கையப்படுத்தப்பட்டது.
அந்த நிலத்திற்கு நிர்ணயித்த தொகை மிகக் குறைவு என நில உரிமையாளர் கருப்பையா நீதிமன்றத்தில் முறையிட, ஒரு செண்ட் ஆயிரம் ரூபாய் எனக் கணக்கிட்டு இரண்டு ஏக்கர் 14 சென்ட் நிலத்தை 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வழங்க 1982 ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி விட்டு மீதித்தொகையைச் செலுத்தாமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததால், 20 லட்சத்து 5 ஆயிரத்து 754 ரூபாயை வட்டியுடன் பாக்கி வைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட, 2009 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி கலெக்டர் மற்றும் தாசில்தாரின் வாகனங்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.
பணத்தை உடனே ஒப்படைப்பதாக உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்து வாகனத்தை எடுத்துச் சென்றனர்.
இதற்கு எதிராக 2010 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேல்முறையீடு செய்ததில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மனுதாரர் தரப்புக்குப் பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
மனுதாரர் சார்பில் வாகனங்களை ஒப்படைக்கக் கோரி நீதிமன்றத்தை அணுகிய போது, வாகனங்களை ஒப்படைக்கக் கடந்த ஜனவரி 21 ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் வாகனங்களை ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர், மனுதாரரின் வாரிசுதாரர்கள் கலெக்டர் மற்றும் தாசில்தாரின் வாகனங்களை ஜப்தி செய்வதற்காக நேற்று மதியம் 1.30 மணிக்கு வருகை தந்தனர்.
மதியம் தொடங்கி மாலை 6.30 மணி வரை காத்திருந்தும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரியப் பதில் அளிக்காததால் கலெக்டரின் வாகனத்தைக் கயிறு கட்டி மனுதாரரின் வாரிசுதாரர்கள் இழுத்துச்செல்ல முயன்றனர்.
இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ ஷாலினியும், வீட்டு வசதி வாரிய அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாகனத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் அல்லது பணத்தினை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கூறினார்.

மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி கலெக்டர் சங்கீதா மனுதாரர் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக ஏப்ரல் 7 ஆம் தேதி வரை கால அவகாசம் கோரப்படப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வாகனத்தில் கட்டப்பட்ட கயிறுகள் அவிழ்க்கப்பட்டன. இந்த சம்பவத்தால் நேற்று மதியம் முதல் இரவு வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs