கிருஷ்ணகிரி: விஜய் மக்களை சந்திக்காமல் 4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டுக்கால அரசியலை முடித்துவிட்டார் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில், ராசுவீதி, ரவுண்டானா சேலம் சாலையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. இதில், அதிமுகவின் துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி பங்கேற்று பொதுமக்களுக்கு பழங்கள், நீர்மோர் வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுகவினர் சந்தித்தது, கூட்டணிக்காக என்பது உண்மையான தகவல் இல்லை.
டெல்லியில் கட்டப்பட்ட அதிமுக அலுவலக கட்டடத்தை பார்வையிடுவதற்காக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் சென்றார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழகத்தின் நலனுக்காகவும் பல்வேறு நல திட்டங்களை, பெறுவதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். மேலும் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியை விடுவிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். இதில் அரசியல் இல்லை. அதிமுகவை பொருத்தவரை 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த கட்சி. அதிமுக எப்பொழுதும் ஒரே பார்வையில் சென்று கொண்டிருக்கிறது, எங்களுடைய ஒரே எதிரி திமுக தான்.
திமுகவை எதிர்த்து களம் ஆட யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களுடன் யார் இணக்கமாக ஒன்றிணைந்து செயல்பட்டாலும் செயல்பட தயாராக உள்ளோம். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவதும், ஒரு தொண்டனாக இருந்து கூட பணியாற்றுவேன், கட்சியின் நலனே முக்கியம் என அண்ணாமலையும் பேசுவது அவரவர்கள் கருத்து. இது குறித்து அவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில்முனைவோர் மாநாடு நடத்தப்பட்டதன் விளைவாக டெல்டா, ஓலா, டாட்டா எலக்ட்ரானிக்ஸ், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோன்றின. திமுக ஆட்சிக்கு வந்த நான்காண்டு காலங்களில் அது போல ஏதாவது ஒரு நிறுவனம் வந்ததா. 2026 தேர்தலில் திமுகவுக்கும் தமிழக வெற்றி கழகம் இடையே தான் போட்டி என விஜய், அவருடைய கருத்தை சரியாக தான் கூறியுள்ளார். அவர் படங்களை கூட வெளியிட முடியாமல் திமுக ஆட்சியில் சிரமம் கொடுத்தனர்.
அதிமுக ஆட்சியில் அவருக்கு அதுபோன்ற சிரமம் இல்லை. அந்த மனக்குமுறலின் வெளிப்பாடாக அவர் பேசியுள்ளார். அதிலிருந்து வெளியில் வந்து அரசியல் ரீதியாக அவர் பேச வேண்டும். ஆதவ் அர்ஜுனா எங்கு சென்றாலும் தன்னை முன்னிலைப்படுத்தி பேசுகிறார் அவரை அடையாளம் கண்ட விசிக தலைவர் திருமாவளவன் அவரை ஒதுக்கி வைத்தார். சினிமா அனுபவம் மிகுந்தவர் விஜய். இன்னும் மக்களையே அவர் சந்திக்கவில்லை.
அவர் 4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டுக்கால அரசியலை முடித்துவிட்டார். அவர் மக்களை சந்தித்து அரசியல் செய்யும் பட்சத்தில் அரசியலை புரிந்து கொண்டு அவரும் அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வின் போது அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்