சென்னைக்கு எதிரான போட்டியில் மும்பை அணியில் அறிமுக வீரராக களமிறங்கியிருந்த விக்னேஷ் புத்தூர் சிறப்பாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால், அந்த விக்னேஷ் புத்தூரை இப்போது நடந்து வரும் குஜராத்துக்கு எதிரான போட்டியில் மும்பை அணி டிராப் செய்திருக்கிறது.

விக்னேஷ் புத்தூர் கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர். கேரளா ப்ரீமியர் லீக் போட்டியில் கவனம் ஈர்க்கும் வகையில் ஆடியிருக்கிறார். அவரை மும்பை அணியின் திறன் தேடும் குழு கண்டறிந்து தங்கள் முகாமோடு இணைத்துக் கொண்டது. தென்னாப்பிரிக்காவில் நடக்கும் SAT20 போட்டிக்கு அவரை நெட் பௌலராகவும் அழைத்துச் சென்றனர். ஏலத்தில் 30 லட்ச ரூபாய்க்கு அவரை மும்பை அணி வாங்கியது.
சீசனின் முதல் போட்டியாக மும்பை அணி சென்னையை எதிர்கொண்டது. அந்த முதல் போட்டியிலேயே மும்பை அணி விக்னேஷ் புத்தூருக்கு வாய்ப்புக் கொடுத்திருந்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், ருத்துராஜ், துபே, தீபக் ஹூடா என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். தோனி, விக்னேஷை தட்டிக் கொடுத்துப் பேசினார். விக்னேஷ் எங்களின் பெருமைமிகு கண்டுபிடிப்பு என சூர்யகுமார் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில், இன்று குஜராத்தில் நடந்து வரும் போட்டியில் மும்பை அணி விக்னேஷை ப்ளேயிங் லெவனில் எடுக்கவில்லை. மாற்று வீரர்கள் பட்டியலிலும் விக்னேஷ் பெயர் இல்லை.
அறிமுகப் போட்டியிலேயே கலக்கிவிட்டு அடுத்தப் போட்டியில் வாய்ப்பில்லாமல் இருப்பது கொடுமை. விக்னேஷூக்கு ஏதாவது காயமா என்பது பற்றி தகவல் எதுவும் சொல்லப்படவில்லை.