வாஷிங்டன்: இந்தியாவுடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று முன்தினம் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் இங்கு வந்திருந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது கொடுமையானது. அவர் (மோடி) புத்திசாலியான மனிதர், உண்மையில் எனது சிறந்த நண்பர். அவருடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது.
இந்தியா, அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. இது நன்றாக வேலை செய்யும் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ட்ரம்பை சந்தித்துப் பேசினார். அப்போது, “அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக அளவில் வரி விதிக்கிறது. இனி இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு அந்த நாட்டின் பொருட்களுக்கும் நாங்கள் வரி விதிப்போம்” என ட்ரம்ப் கூறியிருந்தார். தொடர்ந்து இதே குற்றச்சாட்டை கூறி வந்த ட்ரம்ப், இப்போது இந்தியாவுடனான வரி விதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாத நடக்கிறது என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.