அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் ரூ.1000-க்கு வாங்கிய ஓவியம், பிரெஞ்சு ஓவியர் ரெனோயர் வரைந்த ஓவியமாக இருந்தால் அது ரூ.8.5 வரை ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியைச் சேர்ந்தவர் ஹேதி மா்க்கோ. இவர் பழங்கால பொருட்களை விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவர் அமெரிக்காவின் மான்ட்கோமெரி மாகாணத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலம் ஒன்றை பார்வையிடச் சென்றனர். அப்போது பழைய பேப்பரில் வரையப்பட்ட ஓவியம் ஒன்று அவர் பார்த்தார். அது அரிய வகை ஓவியமாக இருக்கலாம் என அவருக்கு தோன்றியது. அந்த ஓவியத்தை வாங்கும்படி அவர் தனது கணவரிடம் கூறினார். 12 அமெரிக்க டாலருக்கு பேரம் பேசி அந்த ஓவியத்தை அவர்கள் வாங்கினர்.
வீட்டுக்கு வந்ததும் அந்த ஓவியத்தை ஆராயத் தொடங்கினார். அந்த ஓவியம் வரையப்பட்ட தாள், அதன்பின்னால் இருந்த முத்திரை ஆகியவற்றை பார்த்தபோது, அது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்ட ஓவியம் போல் தெரிந்தது. அதில் மங்கலாக ஒரு கையெழுத்தும் இருந்தது. அது பிரொன்ஸ் நாட்டு பிரபல ஓவியர் பியேர்-அகஸ்டே ரெனோயரின் கையெழுத்து போல் தெரிகிறது. அந்த ஓவியம் ஓவியர் ரெனோயரின் மனைவி அலைன் சாரிகோட்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மரக்கரியை பயன்படுத்தி ரெனோயர் வரைந்த ஓவியங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
தான் வாங்கியது ரெனோயர் ஓவியமா என்பதை உறுதி செய்வதற்காக நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற வைல்டென்ஸ்டைன் பிளாட்னர் மையத்துக்கு அந்த ஓவியத்தை ஹேதி மா்க்கோ கொண்டு சென்றார். இங்கு பழங்கால ஓவியங்கள் பல பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள நிபுணர் குழுவினர் ஏப்ரல் 10-ம் தேதி இந்த ஓவியத்தை ஆய்வு செய்யவுள்ளனர். அந்த ஓவியம் ரெனோயரின் ஓவியம் என உறுதி செய்யப்பட்டால், நிச்சயம் அது ரூ.8.5 கோடி வரை விலை போகும் என ஹேதி மார்ககோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.