மும்பை: மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் நேற்று குண்டு வெடித்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ளது ஜியோராய் பகுதி.
இங்குள்ள அர்தா மஸ்லா கிராமத்தின் மசூதி ஒன்றில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் குண்டு வெடித்தது. இதுகுறித்து கிராமத் தலைவர் தலவாடா போலீஸாருக்கு தகவல் அளித்தார். பீட் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் நவ்நீத் கன்வத் தலைமையிலான போலீஸார் மசூதிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.
கல்குவாரிகளில் பயன்படுத்தப்படும் ஜெலட் டின் வெடிமருந்து குச்சிகள் மூலம் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. மசூதியின் பின்புறம் வழியாக நுழைந்த மர்ம நபர் மசூதிக்குள் ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகளை பதித்து வெடிக்கச் செய்துள்ளார்.
இதில் மசூதியின் உட்பகுதி சேதமடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரம்ஜான் பண்டிகைக்கு முந்தைய நாளில் இந்த சம்பவம் நடைபெற்றதால் அங்கு பதற்றமான சூழலை தவிர்க்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.