மண்டலே: ‘மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை’ என்று அந்நாட்டு ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது.
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்தது. இதன் காரணமாக, மண்டலே நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், தற்போது அந்த பணிகள் மந்தமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக உயர்ந்துள்ளதாகவும், 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், 270 பேரை இன்னும் காணவில்லை என்றும் ராணுவ ஆட்சிக் குழு தெரிவித்துள்ளது. 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் மியான்மரின் பெரும்பகுதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது. பேரழிவின் உண்மையான அளவு இன்னும் உறுதியாக தெரியவில்லை. எனினும், இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியதால், மியான்மரில் ஒரு வார துக்கம் அனுசரிப்பதாக ஆட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஏப்ரல் 6-ஆம் தேதி வரை தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும் என்று ஆளும் ராணுவ ஆட்சிக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் சவால்களை சந்தித்து வரும் மியான்மருக்கு இந்த நிலநடுக்கம் எதிர்கொள்ள முடியாத துயரத்தை அளித்துள்ளது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான மீட்புக் குழுக்கள் போதுமான அளவில் இல்லாததால், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான வாய்ப்பு மங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை இந்தியா, சீன, ரஷ்யா ஆகிய நாடுகள் மியான்மருக்கு அளித்து வருகின்றன. மக்கள் தொடர்ந்து அச்சத்தின் பிடியில் இருப்பதாகவும், கட்டிடங்கள் இல்லாத வெட்டவெளிகளில் மக்கள் உறங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “என்ன நடக்கிறது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது” என்று மண்டலே நகரில் உள்ள மசூதி ஒன்றின் தலைமை நிர்வாகி ஆங் மியிண்ட் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
மண்டலே நகரில் உள்ள 1,000 படுக்கைகள் கொண்ட பொது மருத்துவமனை நிரம்பி வழிகிறது. இதனால், நூற்றுக்கணக்கான நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சை பெற்று வருகின்றனர். “நாங்கள் இங்கே எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிக்கிறோம்” என்று மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முக்கிய நட்பு நாடுகளான இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ள ராணுவ ஆட்சிக் குழு செய்தித் தொடர்பாளர் ஜாவ் மின் துன், “காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், காணாமல் போனவர்களைத் தேடவும் நாங்கள் முயற்சி செய்கிறோம். அதிகாரிகள் தங்களால் இயன்றதைச் செய்கின்றனர்” என்று கூறினார்.
இத்தகைய பெரும் துயருக்கு இடையில், ராணுவ ஆட்சியை எதிர்க்கும் ஆயுதக் குழுக்கள் மீது ராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவது கவனிக்கத்தக்கது.
700 முஸ்லிம்கள் உயிரிழப்பு: கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது பல்வேறு மசூதிகளிலும் ரமலான் நோன்பை ஒட்டி தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லிம்கள் உயிரிழந்ததாக மியான்மர் ‘ஸ்ப்ரிங் ரெவல்யூஷன் முஸ்லிம் நெட்வொர்க்’ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த 700 பேரும் ஏற்கெனவே ராணுவ அரசு அதிகாரபூர்வமாக எண்ணிக்கையில் உள்ளடக்கப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையில்,மியான்மரின் மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக 8 மில்லியன் டாலர் (6.2 மில்லிடன் யூரோ) நிதி தேவைப்படும் என்று கணித்துள்ள ஐ.நா., உலக நாடுகள் தாராளமாக உதவக் கோரியுள்ளது. ஏற்கெனவே உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள மியான்மர் தற்போது நிலநடுக்கத்தால் மனிதாபிமான நெருக்கடியில் இருக்கிறது. மருத்துவமனைகள் போதிய அளவில் இல்லாமல் தெருக்களில் சிகிச்சைகள் நடைபெறுவதும், சடலங்களில் இருந்து வீசும் துர்நாற்றமும் சுகாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.