சூர்யாவின் ‘ரெட்ரோ’ வரும் மே மாதம் முதல் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு அடுத்த படமான ‘சூர்யா 45’, படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். கடந்த நவம்பரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, நிறைவு கட்டத்தை நோக்கி மும்முரமாக நகர்ந்து வருகிறது.

சூர்யாவின் 45வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் த்ரிஷா, யோகிபாபு, நட்டி நட்ராஜ், ‘லப்பர் பந்து’ சுவாசிகா. ‘நெடுஞ்சாலை’ ஷிவதா, மலையாளத்தில் ‘ஹோம்’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இந்திரன்ஸ் எனப் பலரும் நடித்து வருகின்றனர். இதில் இந்திரன்ஸ், ஷங்கரின் ‘நண்பன்’ படத்திற்குப் பின் இப்போது தான் கோலிவுட் திரும்பியிருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி உள்ள மாசாணியம்மன் கோயிலில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு கோவையைத் தொடர்ந்து சென்னையில் நடந்து வருகிறது. சூர்யா, த்ரிஷா ஜோடி இதற்கு முன் ‘மௌனம் பேசியதே’, ‘ஆறு’, ‘மன்மத அன்பு’வில் ஒரு பாடல் என சேர்ந்து நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பில் த்ரிஷாவின் திரைப்பயணம் தொடங்கி 22 ஆண்டுகள் ஆனதையொட்டி கேக் வெட்டி கொண்டாடியது நினைவிருக்கலாம்.
சரி விஷயத்திற்கு வருவோம். சென்னையில் ஈ.சி.ஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்டமான திருவிழா செட் அமைக்கப்பட்டு, சூர்யா – த்ரிஷா ஜோடியின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் ஆடிப்பாடும் அந்த பாடல் காட்சி செம மாஸ் ஆக இருக்கும் என்கின்றனர். மண் மணம் கமழும் கிராமியப் பாடலாக இந்தப் பாடலை கொடுத்திருக்கிறார் சாய் அபயங்கர்.

5 நாட்கள் நடைபெற்ற அந்தப் பாடல் படப்பிடிப்பைத் தொடர்ந்து இதர நடிகர்களின் காம்பினேஷனில் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ‘லப்பர் பந்து’ படத்தில் சுவாசிகாவின் கதாபாத்திரம் பேசப்பட்டதுபோல, இதிலும் அவரது கேரக்டர் பேசப்படும் என்கின்றனர். ஆர்.ஜே.பாலாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அனேகமாக ஏப்ரல் மாதத்தோடு மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என்கிறார்கள். இந்தப் படப்பிடிப்பை முடித்துவிட்டு சின்னதொரு பிரேக் எடுத்து விட்டு, ‘சூர்யா 46’ படத்திற்கு செல்கிறார் சூர்யா. ‘லக்கி பாஸ்கர்’ வெங்கி அட்லூரி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஜூனில் தொடங்கலாம் என்கின்றனர்.