புதுடெல்லி: நாளை (ஏப்ரல் 2) முதல் அமலுக்கு வர உள்ள, அமெரிக்க பரஸ்பர வரிகளில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தியாவின் விவசாயப் பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தங்கள் நாட்டின் பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இறக்குமதியாகும் பிற நாடுகளின் பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட நாடுகள் விதிக்கும் அதே அளவுக்கு (பரஸ்பர வரி) ஏப்ரல் 2-ம் தேதி முதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். தற்போது, அமெரிக்கா வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
இதையடுத்து, இது தொடர்பாக உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார். இதனால் உலக நாடுகள் கலக்கத்தில் உள்ளன.
இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், “ஒவ்வொரு நாடும் அமெரிக்காவுக்கு விதிக்கக் கூடிய வரி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, அமெரிக்க பால் பொருட்கள் மீது ஐரோப்பிய யூனியன் 50 சதவீத வரியும், அமெரிக்க அரிசி மீது ஜப்பான் 700 சதவீத வரியும், அமெரிக்க விவசாய பொருட்களுக்கு மீது இந்தியா 100 சதவீத வரியும், அமெரிக்க வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா 300 சதவீத வரியும் விதிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், துரதிர்ஷ்டவசமாக, நீண்ட காலமாக இந்த நாடுகள் அமெரிக்காவிற்கு அதிக வரி விதித்து, அமெரிக்க தொழிலாளர்களை ஏளனம் செய்கிறது. இதனால், அமெரிக்க பொருட்களை அந்தச் சந்தைகளில் இறக்குமதி செய்வது சாத்தியமற்ற ஒன்று.
இதனால், ஏராளமான அமெரிக்கர்கள் தங்கள் வர்த்தகத்தை இழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இதனால், வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியம், மெக்சிகோ, அயர்லாந்து, ஜெர்மனி, தைவான், ஜப்பான், தென் கொரியா, கனடா, இந்தியா, தாய்லாந்து, இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மேலும், இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.