புதுடெல்லி: அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் மிகப் பெரிய முன்னெடுப்பாக மார்ச் 31 நிலவரப்படி மொத்தம் 4,719 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் அரசியல் கட்சிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி மட்டத்தில் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகின்றன.
2025 மார்ச் 31 நிலவரப்படி 25 நாட்களில் மொத்தம் 4,719 கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் 40 கூட்டங்கள், 800 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் 800 கூட்டங்கள் மற்றும் 3,879 தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் 3,879 கூட்டங்கள் நடத்தப்பட்டன. இவற்றில் நாடு முழுவதும் 28,000க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
2025 மார்ச் 4-5 தேதிகளில் புதுதில்லியில் உள்ள ஐஐஐடிஇஎம்-ல் நடைபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மாநாட்டின் போது தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் வழங்கிய உத்தரவுகளின்படி இந்தச் சந்திப்புகள் நடைபெற்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.