வாஷிங்டன்: அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீதான இறக்குமதிக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தங்கள் நாட்டின் பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இறக்குமதியாகும் பிற நாடுகளின் பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட நாடுகள் விதிக்கும் அதே அளவுக்கு (பரஸ்பர வரி) ஏப்ரல் 2-ம் தேதி முதல் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, இது தொடர்பாக உலக நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதனிடையே, ட்ரம்பின் கூடுதல் வரி விதிப்பால் நியாயமற்ற வகையில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் 10 முதல் 15 நாடுகளுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும் என தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “அனைத்து உலக நாடுகளின் பொருட்கள் மீதும் கூடுதல் வரி விதிக்கப்படும். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்றார்.
பரஸ்பர வரி விதிக்கப்படும் நாளான ஏப்ரல் 2 அமெரிக்காவுக்கு விடுதலை நாள் என ட்ரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார். அந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் வரிகளை சிறிதளவு குறைக்க வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் ட்ரம்ப் கூறும்போது, “அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுடன் இனிமையாகவும் தாராளமாகவும் கனிவாகவும் இருப்பேன். பல தசாப்தங்களாக உலக நாடுகள் அமெரிக்காவிடம் காட்டிய தாராளத்தைவிட எங்கள் வரி விதிப்பு கனிவாக இருக்கும். வரலாற்றில் இதுவரை எந்த ஒரு நாடும் பாதிக்கப்படாத அளவுக்கு எங்கள் நாடு பாதிப்புக்குள்ளானது. ஆனால் உலக நாடுகளைப்போல் அல்லாமல் மற்ற நாடுகள் மீது இனிமையாக நடந்து கொள்வோம். இந்த நடவடிக்கையால் எங்கள் நாட்டுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும்” என்றார்.
இதுகுறித்து அமெரிக்க வர்த்தக துறை உயர் அதிகாரி பீட்டர் நவரோ கூறும்போது, “உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி மூலம் ஆண்டுக்கு 600 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். இதில் வாகன இறக்குமதி மூலம் மட்டும் 100 பில்லியன் டாலர் கிடைக்கும்” என்றார்.
ஈரான் மீது வெடிகுண்டு வீசுவோம்: ஈரான் தனது அணு ஆயுத திட்டங்களை கைவிடாவிட்டால் அந்த நாட்டின் மீது வெடிகுண்டு களை வீசுவோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், இதை ஏற்க மறுத்து வரும் ஈரான் அதிகாரிகள், தங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி தரப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை தொலைபேசி மூலம் ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறும் போது, “அணு ஆயுத திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் அந்நாட்டின் மீது வெடிகுண்டு வீசப்படும். இது அவர்கள் இதுவரை பார்த்திராத தாக்குதலாக இருக்கும்” என மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்பதற்காக ஈரான் ராணுவம் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. வான்வழி தாக்குதலை சமாளிக்கக் கூடிய இந்த ஏவுகணைகள் ‘ஏவுகணை நகரம்’ என பெயரிடப்பட்டுள்ள தரைகீழ் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவையும் ஈரான் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானின் உயர் அதிகாரம் பெற்ற தலைவர் அயதொல்லா காமேனிக்கு கடந்த மார்ச் 12-ம் தேதி ஒரு கடிதம் எழுதினார். அதில், ஈரானின் அணு ஆயுதங்களை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இது தொடர்பாக அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த முடியாது என ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் கூறியிருந்தார். அதேநேரம் மறைமுக பேச்சுவார்த்தைக்கு தயார் என ஓமன் அரசு மூலம் அமெரிக்காவுக்கு ஈரான் பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.