நாளை காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்

புதுடெல்லி,

வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக, வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். அந்த மசோதா, முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், வக்பு சொத்துகளை முறைகேடாக அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதனால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழு, பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவையும், தனது அறிக்கையையும் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டம் இன்று மீண்டும் தொடங்கியது. 4-ந் தேதியுடன் கூட்டத்தொடர் முடிவடைகிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மக்களவை எம்.பி.க்கள் கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வக்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இந்த வாரத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில் காங்கிரஸ் ஆலோசனை நடத்துவது முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.