தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர்களுக்குள் ஒரு ஒற்றுமை இல்லை. ஃபெஃப்சி அமைப்பை அழித்து புதிய அமைப்பை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கமாட்டோம்.” எனக் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து ஃபெஃப்சி சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பேசியிருந்தார்.

`மேலிடத்து உத்தரவு’ என்று கூறியதை மறந்தீரோ?
அதனை தொடர்ந்து நேற்றைய தினம் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் கலைசெல்வி, `தனுஷ், அவர்களின் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்துப் பெற்ற முன்பணத்திற்கு இன்று வரை கால்ஷிட் தரவில்லை’ எனக் கூறி அறிக்கை வெளியிட்டு ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கு பலக் கேள்விகளைக் கேட்டிருந்தார்.
அந்த அறிக்கையில், “தனுஷ் அவர்கள் எங்கள் நிறுவனத்திற்குப் படம் நடித்து தரவேண்டும் (முன்பணம் பெற்ற அடிப்படையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் தரவேண்டும்) என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே தாங்கள் குறுக்கிட்டு, DAWN pictures திரு.ஆகாஷ் அவர்களின், “இட்லிகடை படப்பிடிப்பு நடக்கவேண்டும், மேலிடத்து உத்தரவு” என்று கூறியதை மறந்தீரோ?” எனக் குறிப்பிட்டிருந்தார்.
`நான் வேதனையாக இருந்தநாள்’
இந்த அறிக்கை வெளியானப் பிறகு செல்வமணி நேற்றைய தினம் ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார். அந்த நிகழ்வில் அவர் பேசுகையில், “எனக்கு இப்போது 60 வயதைக் கடந்துவிட்டது.
இந்த 60 வருடங்களில் நான் மிகவும் வேதனையாக இருந்தநாள் நேற்றுதான் (மார்ச் 30). என்னுடைய தாய், தந்தையாரை எதிர்த்து நிற்கும்போது எந்தளவுக்கு வேதனைக்கு ஆளானேனோ, அந்த அளவுக்கு நேற்றைய தினம் (மார்ச் 30) வேதனையுடன் இருந்தேன்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னைப் போல நன்மை செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது. இதுவரை பொறுப்பில் இருந்த நிர்வாகிகள், இருக்கும் நிர்வாகிகள் யாரும் அவ்வளவு நன்மைகளை செய்திருக்கமாட்டார்கள்.

சிரமமான சூழல்களுக்கு எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு யாரெல்லாம் எதிரியோ அவர்களை எதிர்பதற்கு எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனச் சொல்லியிருக்கிறோம். எந்த ஈகோவும் இல்லாமல் அவர்கள் அழைக்கும்போதெல்லாம் சென்றிருக்கிறோம்.
பல நாட்கள் அவர்கள் அங்கு இல்லாமல் திரும்பியிருக்கிறோம். பல மணி நேரமும் அங்கு காத்திருக்கிறோம். ஆனால், அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
தமிழ் சினிமா சரியான திசையில் செல்வதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றாக இருந்தால்தான் முடியும் என்பதை யோசித்துதான் நான் அதைச் செய்திருந்தேன்.
`போராளியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்’
அவர்களுடைய புரிதல் இன்மைக்கு நான் எதுவும் பண்ண முடியாது. மேடைக்கு அனைத்து தயாரிப்பாளர்களை அழைத்து வாருங்கள். அங்கு நான் எதேனும் தவறு செய்திருந்தால் திருத்திக் கொள்கிறேன்.
ஏற்கெனவே ஃபெஃப்சி-க்கு பல கெட்டப்பெயர்கள் வந்திருக்கிறது. எங்களை அடியாட்களாக இல்லாமல் போராளியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழ் சினிமா சரியான பாதையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொள்வதற்கு கஷ்டப்பட்டு ஒரு விஷயத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.

ஆனால், இன்று வரை அவர்கள் கையெழுத்துப் போடவில்லை. இந்த விஷயம் அவர்கள் 100 வருடங்கள் போராடினாலும் பண்ண முடியாதது.
எங்களால் முடிந்த அத்தனை விஷயங்களையும் அவர்கள் கேட்காமல் நான் செய்துக் கொடுத்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், அரசுக்கும் எனக்கும் பிளவு ஏற்படுத்தும் முயற்சியை செய்து பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
`சுயமரியாதைதான் எனக்கு பெரியது’
அவர்களின் தரத்திற்கு இறங்கி அத்தனை செயல்களையும் செய்தனர்.தொழிலாளர்கள் கூலியாக இல்லாமல் தொழிலாளியாக மாற வேண்டும் என முயற்சிக்கும்போது என்னுடைய சுயமரியாதையையும், ஒழுக்கத்தையும் குறைக்க்கிறார்கள்.

அதனால்தான் இங்கு பேச வேண்டிய அவசியம் வந்தது. நான் இன்றைக்குப் படம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சுய ஒழுக்கத்தில் என்னைவிட சிறந்தவன் இல்லை. என்னுடைய சினிமா, குடும்பம், பதவி என அனைத்தையும்விட என்னுடைய சுயமரியாதைதான் எனக்கு பெரியது.” எனக் பேசியிருக்கிறார்.