ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை படைக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஸ்ரேயாஸ்

முல்லாப்பூர்,

18-வது ஐ.பி.எல். தொடரில் முல்லாப்பூரில் நேற்றிரவு அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 67 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் நேஹல் வதேரா 62 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்திற்கு முன்னதாக கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பதிவு செய்திருந்தார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்திருந்த கேப்டன்களின் சாதனை பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த சென்னை முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியை (7 வெற்றிகள்) முந்தி, ஷேன் வார்னேவுடன் 2-வது இடத்தை பகிர்ந்திருந்தார். இன்னும் 3 வெற்றிகள் பெற்றிருந்தால் முதலிடத்தில் இருந்த கம்பீரை (10 வெற்றிகள்) முந்தி தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற வரலாற்று சாதனையை படைத்திருப்பார்.

ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் அந்த மாபெரும் சாதனை படைக்கும் வாய்ப்பை ஸ்ரேயாஸ் தவறவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.