புது டெல்லி: நாட்டு மக்களின் மனங்களில் தாமரை நம்பிக்கையின் சின்னமாக உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சியினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜகவின் நிறுவன தினத்தை முன்னிட்டு கட்சியினருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள பதிவில், “பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியினால் இன்று நாட்டு மக்களின் மனதில் ‘தாமரை’ நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறது. கடந்த காலங்களில் பாஜக செய்த சேவை, பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் கலாச்சார விழிப்புணர்வு மாதிரியான பணிகள் வரும் நாட்களில் மைல்கற்களாக மாறும்.
கோடான கோடி பாஜக தொண்டர்கள், கட்சியில் கருத்தியல் உறுதிப்பாட்டை பின்பற்றி தேசத்தைக் வலிமையாக கட்டியெழுப்புவதில் தொடர்ந்து பங்களிப்பார்கள். நமது கட்சி எளிய மக்கள் மற்றும் பெண்களின் நலனை உறுதி செய்துள்ளது. சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்துள்ளோம். அயோத்தியில் ராமர் கோயில் கட்டி உள்ளோம். இப்படி தேசத்தின் நலன் சார்ந்து நமது அமைப்பின் இயக்கம் உள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் ஒரு கட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பாஜக விளங்குகிறது. நாட்டில் உள்ள எளிய மக்களுக்கு தேவையான வீடு, உணவு, சுகாதாரம் போன்றவற்றை வழங்கியுள்ளது. விவசாயிகளின் நலனிலும் கவனம் செலுத்தி வருகிறது.” என அமித் ஷா அதில் கூறியுள்ளார்.
கடந்த 1980, ஏப்ரல் 6-ல் பாஜக நிறுவப்பட்டது. ஜன சங்கம் பாஜகவின் தொடக்கத்துக்கு அடிப்படை. 1977-ல் எமர்ஜென்சிக்கு பிறகு ஜன சங்கம் ஜனதா கட்சி உடன் இணைந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்புடன் ஏற்பட்ட முரண் காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வெளியேறிய ஜன சங்க உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியை நிறுவினர்.
அந்த கட்சியில் இருந்து வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி என இதுவரை இரண்டு பிரதமர்கள் நாட்டுக்காக பணியாற்றி உள்ளனர். 1996, 1998, 1999-ல் மக்களவை தேர்தலில் அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சியாக அறியப்பட்டது. 2014, 2019 மற்றும் 2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.