பதிலடி வரி விதித்த சீனா மீது கோபத்தில் டிரம்ப் விதித்த கூடுதல் வரி

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். உலக நாடுகளுக்கான இந்த வரி விதிப்பை ஏப்ரல் 2-ம் தேதி அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அதன்படி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 27 சதவீத பரஸ்பர வரியும், சீனாவுக்கு 34 சதவீதம், வங்காள தேசம் 37 சதவீதம், வியட்நாம் 46 சதவீதம், ஐரோப்பிய ஒன்றியம் 20 சதவீதம், ஜப்பான் 24 சதவீதம், இந்தோனேசியா 32 சதவீதம், பாகிஸ்தான் 29 சதவீதம், தாய்லாந்து 36 சதவீதம் என வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 10 சதவீத அடிப்படை வரி விதிப்பு ஏப்ரல் 5-ம் தேதியிலிருந்தும், கூடுதல் வரி விதிப்பு ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் இந்த வரி விதிப்புக்கு பல்வேறு நாடுகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இதனையடுத்து ஏப்ரல் 10-ம் தேதி முதல் அனைத்து அமெரிக்க பொருட்களுக்கும் 34 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீனா அறிவித்தது.

இந்தநிலையில், சீனா மீது கூடுதலாக 50 விழுக்காடு வரியை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா விதித்த 34 விழுக்காடு பதிலடி வரியை திரும்பப் பெறாவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வரி விதிப்பு தொடர்பாக சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படுவதாக தெரிவித்த டிரம்ப், பிற நாடுகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என அறிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.