பியுனோஸ் அயர்ஸ்,
அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரரான விஜய்வீர் சித்து, ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்டார்.
தொடக்கம் முதல் அபார திறமையுடன் விளையாடிய சித்து, அடுத்தடுத்து புள்ளிகளை சேர்த்து முன்னிலை பெற்றார். அவர் இந்த போட்டியில் இறுதி வரை விடாப்பிடியாக முன்னிலை பெற்று, சக போட்டியாளர்களுக்கு கடும் சவாலாக விளங்கினார்.
இதனால், போட்டியின் முடிவில், வெற்றி பெற்று, உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்காக 4-வது தங்க பதக்கம் வென்று தந்துள்ளார். இத்தாலி நாட்டை சேர்ந்த ரிக்கார்டோ மஜாட்டி வெள்ளி பதக்கம் வென்றார். சீன வீரரான யாங் யுஹாவோ (வயது 19) போட்டியில் வெண்கலம் வென்றார்.
இதேபோன்று இந்திய வீராங்கனையான சுருச்சி இந்தர் சிங், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் திறமையாக விளையாடி தங்கம் பதக்கம் வென்றார். இந்தியா 4 தங்க பதக்கங்களுடன் மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.