தாவணகெரே,
கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்தவர் உதய் (வயது 35). இவரது மனைவி ஹேமா (32). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சிந்துஸ்ரீ (4), ஸ்ரீஜெய் (3) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமா மாரடைப்பால் இறந்துபோனார்.
இதனால் மனைவி இறந்த துக்கத்தில் உதய் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததுடன், குழந்தைகளை சரியாக கவனிக்க முடியவில்லையே என்ற கவலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை உதய் தனது 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்துக்கொலை செய்துள்ளார். பின்னர் அவர் தனது வீட்டின் சுவரில் ‘ஐ லவ்யூ ஹேமா’ என ரத்தத்தில் எழுதியுள்ளார். அதையடுத்து உதய் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில் காதல் மனைவி ஹேமா மாரடைப்பால் உயிரிழந்த துக்கத்தில் குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்று, உதய் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.