மும்பை: கடந்த 2020 ஏப்ரலில் பெண் ஒருவர் தனது மைத்துனிக்கு எதிராக புகார் அளித்திருந்தார். அப்புகாரில் அவர், “எனக்கும் எனது மைத்துனிக்கும் ஏற்பட்ட சண்டையில் அவர் என்னை கடித்தார்.
ஆபத்தான ஆயுதத்தால் எனக்கு தீங்கு விளைவித்தார்” என்று கூறியிருந்தார். இது தொடர்பாக மைத்துனி மீது இந்திய தண்டனை சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் (ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி காயப்படுத்துதல்) வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் அமர்வு விசாரித்து, அண்மையில் ரத்து செய்தது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், “மனித பற்களை கடும் தீங்கு விளைவிக்கும் ஆபத்தான ஆயுதமாக கருத முடியாது. மரணம் அல்லது கடுமையான தீங்கு ஏற்படுத்தக் கூடிய ஒரு கருவியின் மூலமாக காயம் ஏற்பட்டிருந்தால் மட்டுமே இந்திய தண்டனைச் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் தண்டிக்க முடியும்” என்று கூறியுள்ளது.