‘சென்னை தோல்வி!”
சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்திருந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 103 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. டார்கெட்டை சேஸ் செய்த கொல்கத்தா அணி மிக எளிதாக 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருந்தது. தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

‘தோனி விளக்கம்!’
தோனி பேசியதாவது, ‘கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு சாதகமாக நடக்கவில்லை. இன்னும் ஆழமாக என்னவெல்லாம் தவறாக செல்கிறது என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். நிறைய சவால்கள் இருக்கிறது. ஆனால், அதையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும். நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. பேட்டிங்கின் போது பந்து கொஞ்சம் நின்றுதான் வந்தது.
ஆனால், நாங்கள் பௌலிங் செய்கையில் அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. எங்களுக்கு பார்ட்னர்ஷிப்களே அமையவில்லை. பவர்ப்ளை பற்றி பேசுகையில் சூழலை பற்றியும் பேச வேண்டும். நாங்கள் சில போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறோம். எங்களுடைய அணுகுமுறையை வேறு அணிகளோடு ஒப்பிட வேண்டாம் என நினைக்கிறேன்.

எங்களுடைய பலம் என்னவோ அதற்கேற்ப ஆடினால் போதும் என நினைக்கிறேன். எங்கள் அணியில் சிறப்பான ஓப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா பந்துளையும் சிக்சர் அடிக்கக்கூடியவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் திறன் வாய்ந்த தரமான பேட்டர்கள். ஸ்கோர் போர்டை பார்த்து அழுத்தம் ஏற்றிக்கொள்ளாமல் சீரான இடைவெளியில் ஃபோர்களை அடித்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.’ என்றார்.
சென்னை அணியின் தொடர் தோல்விகளைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.