சாதி மற்றும் பாலின பாகுபாட்டுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘பூலே’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவிருந்தது.
இப்படத்தை இயக்குநர் ஆனந்த் மகாதேவன் இயக்கியிருக்கிறார். படத்திற்கு எழுந்துள்ள பிரச்னைகளால் படத்தின் ரிலீஸை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிராமண சமூகத்தினர் இத்திரைப்படத்தில் அவர்களை தவறாக சித்தரித்திருப்பாதக் கூறி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
சில அமைப்புகளும் படம் பொய்யான தகவல்களைக் கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்கள்.
தணிக்கை வாரியம் படத்திற்கு முதலில் யூ சான்றிதழ் வழங்கியிருந்தது. பிறகு படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் படத்தில் சில கட்களை மேற்கொள்ள தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது.
சாதி குறித்தான உரையாடலைக் கொண்ட வாய்ஸ் ஓவரையும், சாதிய அமைப்பை விளக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது.

இதனை தாண்டி படத்தில் சில வசனங்களையும் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். பிராமண சமூகத்தினரிடமிருந்து வந்த கடிதங்கள் தொடர்பாக நேர்காணலில் பேசிய இயக்குநர் ஆனந்த் மகாதேவன், ” படத்தின் டிரெய்லர் பற்றி சில தவறான புரிதல்கள் இருக்கிறது. படத்தைப் பார்ப்பதில் எந்த தொந்தரவும் இருக்காது என சில சந்தேகங்களை அகற்ற வேண்டியது இருக்கிறது.” எனக் கூறியிருக்கிறார்.