புதுடெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை, இடுப்பு, காலில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் என்ஐஏ அதிகாரிகளிடம் அமெரிக்க காவல்துறை ஒப்படைத்த முதல் படம் வெளியாகியுள்ளது.
மும்பை கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் படகுகள் மூலம் ஊடுருவி தாஜ் ஓட்டல், மும்பை ரயில் நிலையம், யூத வழிபாட்டுதலம் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் 6 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்த தீவிரவாதி தஹாவூர் ராணா (64) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை வழக்கு விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையல் தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தஹாவூர் ராணாவை அமெரிக்க காவல்துறை கடந்த புதன் கிழமை இந்தியாவின் என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதன் முதல் படத்தை அமெரிக்க நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் தஹாவூர் ராணாவின் இடுப்பு மற்றும் கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன. இதையடுத்து சிறப்பு விமானத்தில் தஹாவூர் ராணா கடந்த புதன் கிழமை இந்தியா அழைத்து வரப்பட்டார்.
இந்த பயணத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக கண்காணித்தது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து புறப்பட்ட விமானம் ருமேனியாவில் மட்டும் நின்றது. அதன்பின் டெல்லி பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தது.
18 நாள் காவல்: அதன்பின் அவர் டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தர் ஜித் சிங் முன்பு காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 20 நாள் காவலில் அனுப்ப வேண்டும் என என்ஐஏ வழக்கறிஞர் நரேந்தர் மான் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், தஹாவூர் ரானாவை 18 நாள் என்ஐஏ காவலில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை தாக்குதல் தொடர்பாக தஹாவூர் ராணா மீது 10 குற்ற வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.