வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு கட்டுப்பாடு

புதுடெல்லி,

பஞ்சாப் மாநிலம் பஞ்ச்குலாவில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம், உளவுத்துறை ஐ.ஜி.யாக ஆள்மாறாட்டம் செய்த ஒருவர், ஒரு தொழில் அதிபரை மிரட்டி ரூ.1 கோடியே 49 லட்சத்தை தனது வங்கிக்கணக்கில் செலுத்துமாறு மிரட்டினார்.

இதுதொடர்பாக போலீசார் பதிவு செய்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுமாறு தொழில் அதிபர் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று, ஐகோர்ட்டு சி.பி.ஐ.க்கு மாற்றியது. குற்றம் சாட்டப்பட்டவர் அந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் சுதன்சு துலியா, வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு அமர்வு, ஐகோர்ட்டு உத்தரவை ரத்துசெய்தது. நீதிபதிகள் கூறியதாவது:-

ஒரு வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பது அவசியம் என்பதற்கான முகாந்திரம் இருந்தால் மட்டுமே அதை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும். சர்வசாதாரணமாகவோ, அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்காகவோ அப்படி மாற்றக்கூடாது.யூகமான குற்றச்சாட்டுகள், சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கு போதுமானவை அல்ல” இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.