புதுடெல்லி: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தீவிரவாதி தஹாவூர் ராணா, தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகளின் விசாரணையில் உள்ளார். அவரிடம் நாளொன்றுக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை விசாரணை மேற்கொள்வதாக தகவல். விசாரணையில் உள்ள அவர், தனக்கு பேனா, பேப்பர் மற்றும் குர்ஆன் வேண்டுமென கேட்டுள்ளதாக தகவல்.
மேலும், அவருக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப் படுவதாகவும், தனது தரப்பு வழக்கறிஞர்களை சந்திக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
64 வயதான அவர், கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. அதன்படி அண்மையில் அவர் இந்தியா அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 20 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் அனுமதி கோரினர். இந்நிலையில், ராணாவை 18 நாட்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க கடந்த 11-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது அவரிடம் மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.