லக்னோ,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் கான்வே மற்றும் அஸ்வின் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஷேக் ரஷீத், ஜாமி ஓவர்டான் சேர்க்கப்பட்டனர்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 63 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, பதிரானா தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் 167 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷிவம் துபே 43 ரன்களுடனும் (37 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), தோனி 26 ரன்களுடனும் (11 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.
இந்நிலையில் சென்னை அணியிலிருந்து அஸ்வின் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விளக்கம் அளித்த தோனி,
” கடந்த போட்டிகளில் நாங்கள் அஸ்வின் மீது அதிக அழுத்தத்தை கொடுத்தோம். முதல் பவர்பிளே ஓவர்களில் அவர் 2 ஓவர்கள் வீசினார். அதனை அஸ்வின் சமாளிக்கத் தடுமாறியதால் பவுலிங் துறையில் மாற்றங்கள் செய்தோம். இந்த மாற்றம் சிறந்ததாக தெரிகிறது. ஒரு பந்துவீச்சு பிரிவாக இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்” என்று கூறினார்.