இயக்குநரும் நடிகருமான எஸ்.எஸ்.ஸ்டான்லி உடல்நலக்குறைவால் இறந்திருக்கிறார்.
இவருக்கு வயது 60. கடந்த 2002-ம் ஆண்டு ஶ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.ஸ்டான்லி.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை கதாநாயகனாக வைத்து ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ திரைப்படத்தை இவர் இயக்கினார்.
இத்திரைப்படத்திற்கு மீண்டும் ஶ்ரீகாந்துடன் கைகோத்து ‘மெர்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரைச் சாலை’ ஆகிய திரைப்படங்களையும் இவர் எடுத்திருந்தார்.
மொத்தமாக நான்கு படங்களை இயக்கியிருக்கும் எஸ்.எஸ்.ஸ்டான்லி ‘கிழக்கு கடற்கரைச் சாலை’ திரைப்படத்திற்குப் பிறகு நடிகராக கோலிவுட்டில் வலம் வரத் தொடங்கினார்.
முக்கியமாக, பெரியார் வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்த ‘பெரியார்’ திரைப்படத்தில் இவர் அண்ணாவாக நடித்து பலரின் பாராட்டுகளையும் பெற்றிருந்தார். இப்படத்தில் கவனம் ஈர்த்த அவர் கடைசியாக விஜய் சேதுபதி-யின் ‘மகாராஜா’ படத்தில் நடித்திருந்தார்.

இதுமட்டுமல்ல, ‘ராவணன்’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சர்க்கார்’, ‘பொம்மை நாயகி’ உட்பட சில படங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.
எஸ்.எஸ். ஸ்டான்லி மறைந்த இயக்குநர் மகேந்திரனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடதக்கது. இவருடைய உடல் இன்று மாலை வளசரவாக்கம் மின்மயானத்தில் தகனம் செய்யப்படவிருக்கிறது.