மும்பை,
மராட்டிய மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய கல்விக்கொள்கை 2020-ன் ஒரு பகுதியாக பள்ளி படிப்பில் இந்தி மொழி கட்டாய பாடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைகளை ஏற்று புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் 2 மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. இனி இந்தி மொழியும் சேர்க்கப்படும். இந்த புதிய கொள்கை வரும் கல்வியாண்டு முதல் 1- 5ம் வகுப்பு உள்ள மாணவர்களுக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். புதிய பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் SCERT, (எஸ்.சி.இ.ஆர்.டி) பால்பாரதி அமைப்புகள் மூலம் தயாரிக்கப்படும்.மேலும், புதிய கல்வி கொள்கையின்படி,அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள்.
பழைய பாடதிட்டத்தில் இருந்து புதிய பாடத்திட்டத்திற்கு மாறுவதற்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படும். மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை மதிப்பீடு செய்ய Holistic Progress Card’ (HPC) ஹெச்பிசி அறிமுகப்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமுள்ள மராட்டிய மாநிலத்தில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கை திட்டத்தில் 3-வது மொழியாக இந்தி கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.