சனா,
இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.
ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், செங்கடல் பகுதியில் பாதுகாப்பு, ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அமெரிக்க டிரோன்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல், அமெரிக்கா அவ்வப்போது தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஏமனில் அமெரிக்கா இன்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து ஏமன் ரைசா நகரில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு, துறைமுகத்தை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர். 102 பேர் படுகாயமடைந்தனர். சமீபகாலத்தில் ஏமன் மீது அமெரிக்கா நடத்திய மிகப்பெரிய வான்வழி தாக்குதல் இதுவாகும்.