அமராவதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்துக்கு சுமார் 350 காலணிகளை அனுப்பி உள்ளார் அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண். முன்னதாக, அந்த கிராமத்துக்கு சென்ற அவர், வயதான பெண்கள் காலணி அணியாமல் வெறுங்கால்களோடு நடப்பதைக் கண்டுள்ளார்.
உள்ளூர் மக்களின் நிறை, குறைகளை அறியும் வகையில் இரண்டு நாள் பயணமாக அரக்கு மற்றும் தம்ப்ரிகுடா பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள பெதபாடு என்ற கிராமத்துக்கு சென்றிருந்தார். அப்போது அந்தக் கிராமத்தை சேர்ந்த வயதான பெண்கள் உட்பட பெரும்பாலானவர்கள் காலணிகள் அணியாமல் இருப்பதை ஜன சேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண் கவனித்தார்.
அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பிய கையோடு, அந்தக் கிராமத்தில் வசித்து வரும் அனைவருக்கும் காலணிகளை அனுப்பி உள்ளார். அந்தக் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 350 என தகவல். தற்போது அந்த கிராம மக்களுக்கு காலணிகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் குறையை அறிய எந்தவொரு அரசியல் தலைவரும் தங்கள் இருப்பிடத்துக்கு வருவதில்லை. ஆனால், பவன் கல்யாண் அதை முறியடித்துள்ளார். எங்கள் இடத்துக்கு வந்து எங்கள் குறைகளை கேட்டுக் கொண்டு சென்றுள்ளார். அவருக்கு நன்றி என என மக்கள் கூறியுள்ளனர்.