ப்ளோரிடா: அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில், ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பல்கலை. மாணவர்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகம் சர்வதேச புகழ் பெற்ற கல்வி நிலையமாக அறியப்படுகிறது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் 42,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்நிலையில் அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ட்ரம்ப் கண்டனம்: ப்ளோரிடா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு, “இது ஒரு மோசமான சம்பவம். இப்படியான சம்பவங்கள் நடப்பது கொடுமையானது.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.