யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பாரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இது பெருமைமிக்க தருணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்திற்கான உலகளாவிய விண்ட்ஹோக் பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. புதிதாக 74 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியலில் மொத்த ஆவணங்களின் எண்ணிக்கை தற்போது 570 ஆக அதிகரித்துள்ளது.

யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பை வரவேற்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்! யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்திற்கும், வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரமாகும்.

கீதையும் நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரிகத்தையும் உணர்வையும் வளர்த்து வந்துள்ளன. அவற்றின் நுண்ணறிவுத் திறம் உலகத்துக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.

யுனெஸ்கோவின் அறிவிப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “பாரதத்தின் நாகரிக பாரம்பரியத்திற்கான ஒரு வரலாற்று தருணம்! ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பாரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் இப்போது யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த உலகளாவிய கவுரவம் இந்தியாவின் நித்திய ஞானத்தையும் கலை மேதைமையையும் கொண்டாடுகிறது. இந்த காலத்தால் அழியாத படைப்புகள், பாரதத்தின் உலகக் கண்ணோட்டத்தையும், நாம் சிந்திக்கும், உணரும், வாழும் மற்றும் வெளிப்படுத்தும் விதத்தையும் வடிவமைத்த தத்துவ மற்றும் அழகியல் அடித்தளங்கள். இதன் மூலம், இந்த சர்வதேச பதிவேட்டில் நம் நாட்டிலிருந்து இப்போது 14 கல்வெட்டுகள் உள்ளன,” என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சர் கூறினார்.

புதிதாக 74 ஆவணங்கள் சேர்க்கப்பட்டிருப்பது குறித்த அறிவிப்பை அடுத்துப் பேசிய யுனெஸ்கோவின் இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே, “உலக நினைவுகளில் இருந்து ஆவணங்கள் விடுபடக்கூடும் என்பதால், அவற்றின் பாரம்பரியம் என்பது உலகுக்கு இன்றியமையாதது. எனவேதோன், அவற்றுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த யுனெஸ்கோ முதலீடு செய்கிறது. மனித வரலாற்றின் பரந்த நூல்களைப் பதிவு செய்யும் இந்தப் பதிவேட்டைப் பராமரிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.