கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அந்தக் கட்சியினர் சார்பில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், “கூட்டணி, எத்தனை சீட் என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.

தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும்!
அது குறித்து யாரும் சமூகவலைதளங்களில் பதிவிட வேண்டாம். அதை தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும். திமுகவிடம் இருந்து பாஜக தொண்டர்களை பாதுகாப்பது தான் என்னுடைய வேலை. சீட் பற்றி எல்லாம் அமித்ஷா பார்த்துக் கொள்வார்.
பொதுவாக சட்டசபையில் நான் அமைதியாக பேசுவேன். ஆனால் வானதியின் பேச்சு திமுகவினர் அலறும் வகையில் இருக்கும். அவர் பேசினாலே அமைச்சர்கள் அலர்ட் ஆகிவிடுவார்கள். நம்முடைய செல்போன்களை எல்லாம் ஆளும்கட்சியினர் டேப் செய்கின்றனர். அவர்கள் நம் நடவடிக்கைகளை கண்காணிக்கிறார்கள். எனவே எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

அமித்ஷா ஒரே நாளில் எல்லா வேலையையும் முடித்து விட்டார். அமித்ஷா, ‘நான் அடிக்கடி தமிழகம் வருகிறேன். நான் பார்த்துக் கொள்கிறேன்.’ என சொல்லியுள்ளார். அதனால் நாம் நம்முடைய பூத்களில் வேலைகளை பார்த்தால் போதும். இரட்டை இலையோடு அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றம் செல்வோம்.
இதற்கு முன்பு அமித்ஷா போன மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. இப்போது அவர் தமிழகத்துக்கு வந்துள்ளார். அதிமுகவினருடன் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும். நமது கூட்டணி கட்சி ஆளும் கட்சியாக வர வேண்டும். இனியொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் நம்மை பாதுகாக்க முடியாது.

மக்கள் விரோத ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. மக்களிடம் அதிருப்தி நிலவி வருகிறது. எனக்கு முன்பு அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் கட்சியை வலுப்படுத்தி உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு ஒவ்வொரு தொண்டரும் பாடுபட வேண்டும்.” என்றார்.