சுக்மா: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 22 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரிடம் நேற்று சரணடைந்தனர்.
இதுகுறித்து சுக்மாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுக்மா மாவட்டத்தில் காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் 9 பெண்கள் உட்பட 22 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்துள்ளனர்.
இவர்கள் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாவோயிஸ்ட் பிரிவுகளில் செயல்பட்டு வந்தவர்கள். பாதுகாப்பு படையினர் மீதான பல தாக்குதல்களில் தொடர்புடையவர்கள். இவர்கள் 22 பேருக்கும் மொத்தம் 40.5 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தோம்.
வெற்று மற்றும் மனிதாபிமானமற்ற மாவோயிஸ்ட் சித்தாந்தத்தால் ஏற்பட்ட ஏமாற்றம் மற்றும் உள்ளூர் பழங்குடியினர் மீதான அட்டூழியங்கள் காரணமாக சரண் அடைந்தாக கூறுகின்றனர்.
மேலும் தொலைதூர கிராமங்களில் மாநில அரசின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சரண் அடைவோருக்கான அரசின் மறுவாழ்வுக் கொள்கையாலும் அவர்கள் ஈர்க்கப்பட்டனர்.
சரணடைந்த மாவோயிஸ்ட்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் அரசு கொள்கையின்படி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஆண்டு, சுக்மா உட்பட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தார் பகுதியில் 792 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர்.