புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் தினேஷ் சர்மா கூறியிருந்தனர். அவர்களது கருத்து பாஜகவின் கருத்து அல்ல என அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியிருந்தார். இந்த நிலையில் அதை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
“உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை விமர்சித்து பாஜக-வை சேர்ந்த 2 எம்.பி-க்கள் கருத்து கூறினர். அதற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என அக்கட்சியின் தலைவர் நட்டா கூறியுள்ளார். வெறுப்பு பேச்சு என்று எடுத்துக் கொண்டால் இந்த இரண்டு எம்.பி-க்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகின்றனர். சமூகம், நிறுவனம் மற்றும் தனிநபர்கள் என அனைத்தையும் இவர்கள் இருவரும் இகழ்ந்து பேசி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து நட்டாவின் கருத்து வெறும் டேமேஜ் கன்ட்ரோல் தான்.
உச்ச நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குறித்து சொந்த கட்சி எம்.பி-க்கள் கருத்து குறித்து மவுனம் காத்து வருகிறார் நட்டா. அது குறித்து அவர் என்ன சொல்ல நினைக்கிறார்? அதை பாஜக ஏற்கிறதா?
அந்த இரண்டு எம்.பி-க்களுக்கும் தொடர்ந்து அரசியலமைப்பை விமர்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு இல்லையெனில் பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்? அவர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அவர்கள் இருவருக்கும் விளக்கம் கேட்டு நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளாரா?” என தனது எக்ஸ் தள பதிவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நிஷிகாந்த் துபே சொன்னது என்ன? – “உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூடிவிடலாம். நீதிபதிகள் ஒருபோதும் சட்டம் இயற்றும் நாடாளுமன்றமாகிவிட முடியாது. இன்றைய சூழலில் எதிர்ப்பை பதிவு செய்வது அவசியம். நாட்டின் மதரீதியிலான போரை உச்ச நீதிமன்றம் தூண்டி வருகிறது. தனது எல்லை வரம்பை தாண்டி உச்ச நீதிமன்றம் செல்கிறது. எல்லாவற்றுக்கும் உச்ச நீதிமன்றத்துக்கு சென்றால் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் எதற்கு? அவற்றை இழுத்து மூடி விடலாம்” என்றார்.